ஈழத்தமிழ் பின்னணிகொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் எழுதிய "Chai Time at Cinnamon Gardens" நாவல் ஆஸ்திரேலியாவின் இலக்கியத்துக்கான Miles Franklin அதி உயர் விருதினை வென்றிருக்கிறது. சிட்னியில் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சங்கரி எழுதிய மூன்றாவது நாவல் இதுவாகும். Miles Franklin விருதுக்குழுவின் சார்பில் சங்கரியை அழைத்து இந்த வெற்றிச் செய்தியை அறிவித்தபோது, நான்கு தடவைகள் திரும்பத் திரும்பக் கூறிய பின்னரே, சங்கரி தனது வெற்றியை உணர்ந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. Miles Franklin விருதினை வெற்றிகொண்டுள்ள சங்கரிக்கு 60 ஆயிரம் டொலர் பணப்பொதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(தமிழ் இந்துவின் வெளியான முழுமையான கட்டுரை)
காலனித்துவ ஆக்கிரமிப்பின் வழியாக உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தியதன் வழி உருவான நவ - ஆஸ்திரேலியா என்ற பெருந்தேசம் எழுபதுகள்வரை நிறவாதப் பெரும் திமிரோடு தன்னை உலக அரங்கில் பெருமையோடு முன்நிறுத்திய நாடாகும். அதன்பின்னர், உருவான சில கனிவான மாற்றங்கள், அரசாட்சியில் மெல்லிய ஜனநாயக விழுமியங்களைத் தூவத்தொடங்கியது. ஆட்சிப் பீடத்தில் ஒட்டியிருக்கும் பழைய கறைகளை கழுவிக்கொள்வதற்கு, நவ-ஆஸ்திரேலிய தேசமானது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல புண்ணியங்களைச் செய்து, ஜனநாயகத்தின் வழி பல பூஜை - புனஸ்காரங்களை நடத்திவருகிறது. ஒருபடி மேலே சென்று, ஜனநாயகம் என்றால் என்ன தெரியுமா? மக்கள் உரிமை என்றால் எவ்வளவு புனிதமானது தெரியுமா என்று ஏனைய நாடுகளுக்கே பாடங்களைச் சொல்லித்தருகிறது. ஆனால், நவ-ஆஸ்திரேலியாவின் இந்த மாற்றம் உண்மையிலேயே ஆத்மார்த்தமானதா? பெரும்பான்மை ஆஸ்திரேலியர்களின் மனதில், ஜனநாயகப் பண்பும் மக்களாட்சியின் மாண்பும் நீக்கமற நிலைக்கவேண்டும் என்ற தூய சிந்தனையுடன் கூடியதா?
ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த - Miles Franklin - இலக்கிய விருதினை இந்த ஆண்டு வெற்றிக்கொண்டுள்ள சங்கரி சந்திரனின் Chai Time at Cinnamon Gardens என்ற நாவல், நவ-ஆஸ்திரேலிய சிந்தனையின் போலித்தனங்கனை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. சங்கரி சந்திரன், இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணத்தின் அளவெட்டி என்ற கிராமத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெற்றோர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், அங்கு பிறந்தவர். சட்டத்துறையில் கற்றுத் தேர்ந்து, தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். தற்போது, தலைநகர் கன்பராவில் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளோடு வசிக்கிறார். Chai Time at Cinnamon Gardens அவர் எழுதியுள்ள மூன்றாவது நாவல்.
Chai Time at Cinnamon Gardens நாவலின் மூலம் சங்கரி முன்வைத்திருக்கும் அதி முக்கிய கேள்வி - "இந்த நாட்டில் ஆஸ்திரேலியக் குடிமகனாக வசிப்பது என்பது எவ்வாறு? அதனை யார் தீர்மானிப்பது"
எழுபதுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயரத்தொடங்கிய பல நாட்டவர்களினதும் வரவால், ஆஸ்திரேலிய தேசம் புதிய பரிணாமத்தை எட்டத்தொடங்கியது. அதன்பிறகுதான், ஆஸ்திரேலியா பல் கலாச்சார விழுமியங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் பரந்துபட்ட பண்பாட்டு ஞானத்தைப் பெற்றுக்கொண்டது.
ஆனாலும், சொந்த நிலத்திலிருந்து வேரறுத்து வெளியேறி வந்த சமூகங்களின் குற்ற உணர்வு - எல்லா மேலைத்தேய நாடுகளைப்போலவும் - ஆஸ்திரேலியாவுக்கு வசதியான அதிகாரத்தினை கையளித்தது. போகப்போக வரலாற்று ரீதியாகப் புதிய வடிவங்களிலான திமிர்களை அரசுக்கு உருவாக்கியது. அந்தத் தேசிய இறுமாப்பின் வழியாக பல கொடூரமான குடிவரவுக் கொள்கைகள் எழுந்து, காலப்போக்கில் அவை சட்டங்களாகவும் மாறின. அந்த வகையில், வேறு நாடுகளிலிருந்து வந்து குடியுரிமை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் ஆஸ்திரேலியா இன்றுவரை அறைகூவிக்கொண்டிருக்கும் தேசிய முழக்கம்தான் "இந்த நாட்டில் நல்ல ஆஸ்திரேலியனாக இரு" (Be an Australian)

சங்கரி தனது நாவலில், நவ-ஆஸ்திரேலியா பெருமையாகப் பீற்றிக்கொள்கின்ற இந்த அறைகூவலை கிழித்துத் தொங்கப்போட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா தனது பெருமைகளாகப் பேணிவைத்திருக்கும் பல்வேறு பாவனை விழுமியங்களையும் கடுமையாகக் கேள்விக்குட்படுத்துகின்ற இந்த நாவலை நிச்சயமாக ஆஸ்திரேலியாவில் யாரும் பதிப்பிக்க முன்வரப்போவதில்லை என்று தான் முன்னமே எண்ணிக்கொண்டதால், நாவலை முழுமையாக தான் நினைத்தபடி எழுதுவதில் எந்த மனத்தடையும் இருக்கவில்லை என்று நாவல் எழுதிய அனுபவம் குறித்துக் குறிப்பிடும்போது சங்கரி கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சிட்னிக்கு வருகின்ற கணவனும் (ஸாகிர்) மனைவியும் (மாயா) தங்கள் வயதை ஒத்த முதியவர்களுக்கென, வயோதிபர் இல்லமொன்றை நடத்துகிறார்கள். அங்கு தங்குவதற்காக வருகின்ற பல்வேறு நாட்டு முதியவர்களின் ஊடாகவும் ஆஸ்திரேலிய தேசம் என்பது அவர்களுக்கு உண்மையில் எப்படிப்பட்ட புகலிடமாக அடைக்கலம் அளித்திருக்கிறது என்பதை விரித்துச் சொல்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு முதன் முதலாக வந்து இறங்கியவர் என்று நவ-ஆஸ்திரேலியர்களால் போற்றப்படுகின்ற கப்டன் குக் என்பவரது உருவச்சிலை, இந்த வயோதிபர் இல்ல வளாகத்தில் முன்னர் இருந்திருக்கிறது. அந்தச் சிலையை ஒருநாள், ஸாகிர் அகற்றிவிடுகிறார். அதனைப் பெருங்குற்றமாக அடையாளம் கண்டு, நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்கிறது அப்பகுதி கவுன்ஸில்.
இந்தச் சம்பவத்திலிருந்து Chai Time at Cinnamon Gardens நாவல் முற்றிலுமான ஒரு அரசியல் பிரதியாக - ஆஸ்திரேலிய அரசின் போலியான ஜனநாயகப் பெருமிதங்களை சவாலுடன் எதிர்க்கின்ற - வரலாற்று உண்மைகளை மீள ஞாபகமூட்டுகின்ற நூலாக - உருமாறிக்கொள்கிறது.
ஆஸ்திரேலிய நிறவாத அரசியலை, இலங்கையின் இனவாத அரசியலுடன் சமாந்தரப்படுத்தி விரித்துச் சொல்லும் இந்த நாவல், வரலாற்று ரீதியாக ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் முகங்கொடுத்த பேரவலங்களைத்தான் சிறிலங்காவில் தமிழர்களும் எண்பதுகள் முதல் அனுபவித்துள்ளதாக சங்கரி, உண்மைச் சம்பவங்களோடு பாத்திரங்களைக் கோர்த்துச் சொல்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான வரலாறுடைய ஆஸ்திரேலியாவினை பின் தள்ளிவிட்டு, ஆஸ்திரேலிய வரலாறு என்பது கப்டன் குக் வந்து இறங்கிய காலத்துடன் ஆரம்பிப்பது என்று புனைந்து, வரலாற்றின் மீது நின்று பொய்யுரைக்கும் நவ-ஆஸ்திரேலிய சிந்தனையில் கிடக்கின்ற அதே கேவலத்தைத்தான், மஹாவம்ஸத்திலிருந்து இலங்கை வரலாறு தோன்றியதாக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்று தனது பூர்வீக நிலத்தினதும் புகலிட தேசத்தினதும் வரலாற்றுப் பெருங்குற்றத்தினை ஒருபுள்ளியில் இணைத்திருக்கிறார்.

நவ-ஆஸ்திரேலிய நிறவாதமெனப்படுவது மிகவும் நுட்பமானது. சாமர்த்தியமாக சனங்களுக்குள் நுழைத்து, தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சமன் செய்யக்கூடியது. அந்தவகையில், சட்டங்களை முன்வைத்து சனங்களைப் பயம்காட்டுவது என்பது அந்நிய நாடுகள் அனைத்திற்கும் சம்பிரதாயமான சாகசங்களில் ஒன்று. ஆனால், சங்கரி தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணி என்ற காரணத்தினால், நாவலின் முக்கிய இடங்களில், அஞ்சலி என்ற பாத்திரத்தின் வழியாக, ஒரு சட்டத்தரணியாகவே மாறிவிடுகிறார். தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சட்டங்களுக்குள் சடைந்து வைத்திருக்கும் அரசின் லாவகங்களை, தனது தர்க்கங்களால் உடைக்கிறார்.
முற்று முழுதாக ஒரு அரசியல் நாவலென்றாலும், இலங்கைக் குடும்பமொன்றின் அன்றாட ஆஸ்திரேலிய வாழ்வின் வழியாக, புலம்பெயரிகள் மீதான நுட்பமான தனது அவதானிப்புக்களை சங்கரி சுவைபடப் பதிவுசெய்திருக்கிறார். சன் டி.வியுடன் லயித்திருக்கும் சிட்னி வயோதிபர் இல்லமொன்றின் அன்றாடங்கள் எப்படியான - புதிரான - நிகழ்வுகளால் - உரையாடல்களால் - துயரங்களால் - எதிர்பார்ப்புக்களால் நிறைந்துகிடக்கிறது என்பதை பல இடங்களில் அங்கதச்சுவையோடு எழுதியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய அரசினைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி - அதன் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்துகின்ற - எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுவது இது முதல் தடவை அல்ல. ஆஸ்திரேலிய அரசினால் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீண்டகாலமாகக் குடிவரவு அமைச்சின் தடுப்பிலிருந்த ஈரானிய எழுத்தாளர் பெஹ்ரூஸ் பூச்சானி, தடுப்பிலிருந்துகொண்டு ஆஸ்திரேலிய அரசு தனக்கு இழைத்துள்ள கொடுமைகளை No Friend But the Mountains என்ற பெயரில் எழுதிய நூலுக்கு 2019 ஆம் ஆண்டு விக்டோரிய அரசாங்கத்தின் இலக்கியத்திற்கான உயரிய விருது வழங்கப்பட்டது. அப்போதுகூட, அவர் தடுப்பிலிருந்து விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரியின் Chai Time at Cinnamon Gardens நாவல், வெறுமனே ஆஸ்திரேலிய அரசின் பல்வேறுபட்ட முரண்பாடான குடிவரவு அணுகுமுறைகளை - அடிப்படை அரசியல் சிந்தாந்தங்களை - பாவனை ஆட்சிமுறையை - கேள்விக்கு உட்படுத்துவது என்பதற்கு அப்பால், சங்கரி என்ற புலம்பெயர்வின் எந்த வலியையும் அனுபவித்திராத ஒரு எழுத்தாளர், மிகக்கூர்மையான அரசியல் பிரதியொன்றை எவ்வாறு எழுதுவதற்கு களத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற பின்னணியையும் - தேவையையும்கூட - வெளிப்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த Michelle de Kretser என்ற பெண்மணி 2013 ஆம் ஆண்டும் 2018 ஆம் ஆண்டுகளில் இதே Miles Franklin விருதினை வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Komen